Pages

டென்த் டென்ஷன்





+2 தேர்வு முடிவுகள் வந்திருக்கு. அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாராட்டு மழைகளில் நனைகிறார்கள். பரவசத்தோடு டாக்டராவேன், இஞ்ஜினியராவேன் என்று பேட்டிகள் கொடுக்கிறார்கள். வாழ்த்துகள். ஓயாத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!! ரெண்டு வருஷம் கிடந்து படிப்பு, படிப்பு, படிப்பைத் தவிர வேறொண்ணையும் பார்க்காமக் கிடந்து உழைச்ச உழைப்பு!! ஆனா, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க, இக்காலத்து மாணவர்களைப் பாத்தா ஒரு பரிதாபம் வருதா இல்லியா?

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேங்கிறதைப் போல, ரிஸல்ட் வர்றதுக்கு ஒருநாள் முன்னாடியே தற்கொலைச் செய்தியும் வர ஆரம்பிச்சிடுச்சு!! :-(( இன்னும் எத்தனையோ!!

நான் இந்தியா போயிருந்த சமயத்தில்தான் +2 தேர்வு நடந்துகிட்டிருந்தது. +2 மாணவர்களின் குடும்பத்தினர் யாரைப் பாத்தாலும் முகத்துல ஒரு பீதியோடவே இருந்தாங்க. கரண்ட் கட்டால, பச்சக்குழந்தையும், வயசானவங்களும் அவதிப்படுறதைவிட, +2, 10வது மாணவர்கள் அவஸ்தைப்படுறதைத்தான் கவலையோடப் பேசிக்கிட்டாங்க. ஒரு குடும்பத்தில்  +2 அல்லது 10-ம் வகுப்பு மாணவர்கள் இருந்தால், கிட்டத்தட்ட ‘ஊர்விலக்கம்’ செய்ததுபோல, பரீட்சைகள் முடியும்வரை அவர்கள் வீட்டுக்கு யாரும் போவதுமில்லை; அழைப்பதுமில்லை!!

முன்பெல்லாம், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்தான் மன அழுத்தத்தால் அவதிப்படுவர். நான் கல்லூரியில் படிக்கும்போது,  ஒரு தேர்வு நாளன்று, சகமாணவி தேர்வு ஆரம்பிக்கச் சற்றுமுன் கல்லூரியைவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்து, நானும் என் தோழியும் அவளை அழைத்து விசாரித்தோம். கஷ்டப்பட்டுப் படித்தபின்னும் ஒன்றும் மனதில் ஏறவில்லை என்பதால், தேர்வை எதிர்கொள்ளப் பயந்துபோய் வெளியேறியதாகச் சொன்னாள். நாங்களிருவரும், ”பரவால்லை, தெரிந்ததை எழுது. கண்டிப்பாக ஜஸ்ட்-பாஸ் ஆகிவிடலாம். இல்லையென்றாலும் அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தேற்றி, பரிட்சை எழுதச் சொன்னோம். ஆனால், அவள் ஒரேயடியாக மறுத்துவிட்டுப் போயேவிட்டாள்!!

இதேபோல இன்னொரு மாணவியும் படிக்க முடியவில்லையென்று படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாள். பின்னர் நான் அந்தக் கல்லூரியிலேயே வேலை பார்க்கும்போது, படிப்பைத் தொடரவிரும்பி அதற்கான விதிகளைத் தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியரைச் சந்திக்க வந்திருந்தாள். மகிழ்வோடு அவளுடன் ஆசிரியையைக் காண நானும் சென்றேன். இவள் விஷயத்தைச் சொன்னதும், அந்த ஆசிரியை “ஏன், படிக்கலைன்னா வீட்டுல கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?” என்று சக ஆசிரியரோடு சேர்ந்து கிண்டல் செய்துப் பெரிதாகச் சிரித்தார்!! அவள் பின்னர் வரவேயில்லை.

இன்னொரு இறுதியாண்டு மாணவருக்கும் மனநிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது அவருடன் பேசியபோது புரிந்தது. மூன்றாம் வருடம் வரை அரியர்ஸ் இல்லாமல் இருந்தால்தான் கடைசி வருடப் பரிட்சை எழுதமுடியும் என்ற ’பிரேக்’ சிஸ்டம் அப்போது இருந்ததால், வருடத்திற்கொரு தற்கொலையும் உண்டு எங்கள் கல்லூரியில்!! இஞ்சினியரிங் படிப்பது இத்தனைக் கஷ்டமா என்று அவர்களைப் பார்த்த அதிர்ச்சியில் நான் பாதிக்கப்படாமலிருந்ததே பெரிய விஷயம்தான்!!

இன்னொரு சக மாணவி, இப்போது பெரிய பதவியில் இருக்கிறாள். படிக்கும்போது ஏற்பட்ட மனநிலை பாதிப்பினால், அவளிடமிருந்து சில சமயங்களில் weird-ஆக மெயில்கள் வரும்!! அறியாதவர்கள் அவளைப்  பார்த்தால், பேசினால் அப்படித் தெரியாது.

கல்லூரியளவில் நடந்த இவையே ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது.  இப்போ, பள்ளிகள் லெவலிலும் இதுபோன்ற பாதிப்புகள் சகஜமாகிவிட்டன!!

இந்த வருட +2 இயற்பியல் தேர்வு முடிந்த அன்று, ரொம்பக் கஷ்டமான கேள்விகளாக இருந்தன என்று உறவினர் வீட்டு மாணவர் வருத்தப்பட்டுகிட்டிருந்தார். அவரது வகுப்பில் உள்ள ஒரு மாணவிக்குத் முதல்தேர்வு தொடங்கியதிலிருந்து மனநிலை பாதிப்பு ஏற்பட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததாகவும், கஷ்டமான இயற்பியல் கேள்வித்தாளைப் பார்த்துவிட்டு பரிட்சை எழுத மறுத்துவிட்ட அப்பெண், பிறகு பரிட்சை எழுத வரவேவில்லையாம்!!

அவரின் பள்ளியில்(லும்) ப்ளஸ் ஒன் தொடக்கத்திலேயே +2 பாடங்களை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் இரு வருடங்களும் பள்ளி நேரம், காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை என்றால் நம்புவீர்களா? இது எதுக்குன்னா, வேற எங்கயும் ட்யூஷன் போய் நேரத்தையும், பணத்தையும் வேஸ்ட் பண்ணத் தேவையில்லை என்பதற்காகவாம்!! இந்த இருவருடங்களும் இவர்களுக்கு விளையாட்டு பீரியட், ஆர்ட் பீரியட் எதுவும் கிடையாது!! ஒன்லி ‘படி, படி, படி’ தான்!!

தற்போது மாநிலத்தில் முதலிடம் பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரும் ஒரு வலைத்தளத்தில் இதைத்தான் கூறியுள்ளார்.  ஆக, மாநிலம் முழுதும் எல்லா (தனியார்) பள்ளிகளிலும் இதே நிலைமைதான் போல!! 

அந்நாட்களிலாவது, பள்ளிகளில் இப்படி ‘தீவிரப் பயிற்சி’ கிடையாது. ஆனால், இன்று இவ்வாறானப் பயிற்சிகளின் விளைவுகளே, அதலபாதாளத்திற்குச் செல்லும் கல்லூரி முதலாமாண்டு தேர்ச்சி விகிதங்களும், பலப்பல தற்கொலைகளும்.

மத்திய அரசின் ‘CBSE’ பாடத்திட்டம் ஒப்பீட்டளவில் கொஞ்சம் நல்ல முறையில் இருப்பதாகச் சொல்லலாம். “CCE" (Continuous and Comprehensive evaluation) என்ற முறையில் அன்றாடச் செயல்பாடுகளையும் மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதிகச் செயல்முறை பயிற்சிகள் தருகிறார்கள். Once again,  இதிலும் பள்ளி மற்றும் ஆசிரியர்களும் திறன் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் பெற்றோர்கள் ப்ளஸ்-2வுக்கு மட்டுமாவது மாநிலக் கல்விமுறையைத்தான் விரும்புகிறார்கள். அதில்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பதால்!! 

இப்போதெல்லாம் மாணவர்களைவிட, பெற்றோர்கள்தான் அதிக பாதிப்புக்கும், பிரஷருக்கும் உள்ளா(க்கு)கிறார்களோ என்று தோன்றுகிறது. எஙகள் உறவு வட்டத்தில் +2, 10 எழுதியவர்களின் தேர்வு முடிகளெல்லாம் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண்கள்தான். இருந்தாலும் பெற்றோர்கள் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன் என்று புலம்புவதைப் பார்த்தால் பயம்ம்மாக இருக்கிறது. அதைவிட, “அடுத்த வருஷம் உன் மகன் டென்த் எக்ஸாம் எழுதுறானே?” என்று கேட்கும்போது இன்னும் அதிகமாகப் பயம் வருகிறது!!

எத்தனை “நண்பன்”கள் வந்தாலென்ன? ‘தோனி’கள் வந்தாலென்ன? ஆமா, சங்கர் ‘இந்தியன்’படம் எடுத்ததுனால, லஞ்சம் என்ன காணாமலாப் போயிடுச்சு?

ட்யூஷன் டீச்சர்கள் யாரும்  இந்த ஏரியாவில் இருக்காங்களான்னு விசாரிக்கணும். இனி தினமும் 5 மணிக்கு அலாரம் வச்சு நானும் எழுந்து, ‘நல்ல’ அம்மாவா டீ போட்டுக் கொடுக்கணும். நல்லவேளை வீட்டில் டிவி இல்லை. நியூஸ்பேப்பரையும், ஃபோன், இண்டர்நெட்டையும் கட் பண்ணிடலாமான்னு யோசிக்கிறேன். எம்புள்ளை இப்போ டென்த்ப்பா!!