நாளை தீர்ப்பு வரவிருக்கின்ற வழக்கு குறித்தோ, அதன் விவரங்கள் பற்றியதோ இல்லை எனது இந்தப் பதிவு!!
ஒரு வழக்கின் தீர்ப்புக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும்? ஒரு வழக்கு நடந்து, அதன் தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து. சாதகமாகத் தீர்ப்பு பெற்றவர்கள்/பெறாதவர்கள் ஏன் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்?
இதுகுறித்துப் பேசும்போது, நிச்சயம் எல்லாருக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக்குக் காரணமான வழக்கு முடிவும், தினகரன் வழக்கு முடிவும், இன்னும் பல வழக்குகளின் “ட்ராமடிக்” முடிவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!!
இப்போது நடக்கும் பல வழக்குகளின் தீர்ப்புகளும் வியப்பையும், சலிப்பையும்தான் தருகின்றன. கீழ்கோர்ட்டில் ஒருவித தீர்ப்பு வந்தால், அதே வழக்கிற்கு மேல்கோர்ட்டில் வேறுவித தீர்ப்பு வருகிறது. அப்படின்னா என்ன அர்த்தம்? நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையோ குறை சொல்லவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும்போது, சம்பவத்தின் தாக்கத்தில் சாட்சிகள், பிரதிகள், வாதிகள் எல்லாரும் சரியாக வழக்கில் பங்குபெறுவார்கள். அதுவே, வழக்கு இழு, இழுவென்று இழுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி நொண்டியடிக்க ஆரம்பிக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே ஒரு வெறுப்பு வரும்.
அதுவே, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், தீர்ப்பில் ஒப்புதல் இல்லாதவர், மேல்முறையீடு செய்து மீண்டும் வழக்கு நடக்கும்போது, சாட்சிகள் வலியவரின் மிரட்டல் காரணமாகவோ, அல்லது பணத்துக்கு மயங்கியோ பல்டி அடிக்க நேரும்போது தீர்ப்புகள் வேறுவிதமாக வரும் வாய்ப்புகள் அதிகம். பல வழக்குகளிலும் அதைக் கண்கூடாகக் கண்டும் இருக்கிறோம்.
சமீபத்தில் நடந்த சில வழக்குகளில் கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள், மேல்கோர்ட்டில் விடுதலை ஆயினர். இதனை அறியும்போது, நம் மனதில் என்ன தோன்றும்? சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே? சென்ற வருடமோ, முன்போ, இதுபோல ஒரு வழக்கில் இவ்வாறு சாட்சி பிறழ்தல்கள் நடந்தபோது, சாட்சிகளுக்கு நீதிபதியால் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்னொன்று, காலம் கடந்து சாட்சியம் சொல்ல வரும் சாட்சிகள் ஞாபகக் குறைபாடு காரணமாகத் தடுமாற, அது “benefit of doubt" என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகப் போய்விடுகிறது.
இதோ, இபோதும் நாளை தீர்ப்பு வழங்கவிருக்கப்படும் வழக்கும் பாருங்களேன், 60 வருடங்களாக நடந்து வருகிறது!! இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும்? (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா? #டவுட்)
அதேபோல, நீதிமன்ற வழக்கு விசாரணையாக அல்லாமல், அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் முடிவுகள்/ஆலோசனைகளும் செயல்படுத்தப்படாமல் அல்லது படவிடாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம், கிருஷ்ணா கமிஷன்.
சட்டக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்களும், நாட்டின் சட்ட-ஒழுங்கைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய காவலர்கள்-வக்கீல்கள் மோதல்களும், ஏழை இந்தியனுக்கு, நீதி கிடைக்க இவர்களிடம் வருவதைவிட கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்களிடம் போவதே மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.
ஏற்கனவே, வழக்குகளுக்கு ஏற்படும் செலவுகளும், கால விரையமும் மக்களை நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதைத் தவிர்த்து, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் போய் (அல்லது போய்த் தொலைகிறது என்று) விட வழிவகுக்கும் நிலையில், நீதித்துறையிலும், காவல்துறையிலும் இன்று நடப்பவை மக்களுக்கு மேலும் நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்புகளைத்தான் உருவாக்குகின்றன.
ஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள். நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.
தனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்!!
|
Tweet | |||