Pages

சுதந்திரம்




அதீதம் இணைய இதழில் வந்த எனது சிறுகதை
Date: Sunday, August 14th, 2011


வீட்டிற்குத் தோழி குடும்பத்தினர் விருந்துக்கு வந்திருந்தார்கள். வேலை அதிகம் என்பதால், உதவிக்கு ரம்ஜான்பீவியை வரச் சொல்லியிருந்தேன். தினமும் வீட்டு வேலைக்கு வருபவள் தான் என்றாலும், ஞாயிறு அவளுக்கு விடுமுறை. ஆனால், அன்று நான் அழைத்ததாலும், இதற்கு தனிச் சம்பளம் கிடைக்கும் என்பதாலும் வந்திருந்தாள் என்பதைவிட, அவளும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எங்கள் இருவருக்குமிடையில் உள்ள அந்நியோன்யத்தைக் கண்டு என்னிடம் ஆச்சர்யப்பட்ட தோழி, அவளிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். எத்தனைக் குழந்தைகள், கணவன் என்ன செய்கிறான் போன்ற வழக்கமான கேள்விகளைத் தொடுத்தாள். பின் ”நீ படிச்சிருக்கியா?” எனக்கேட்டாள்.

“எங்க? நாலோ, அஞ்சோ படிச்சுட்டு உம்மாவுக்குத் துணையா வூட்ல பீடி சுத்திகிட்டு இருந்தேன். மூணு நாலு வருசத்துக்குள்ளே, எங்க பெத்தும்மா (பாட்டி), அதுங்காலத்துக்குள்ள என் புள்ளயளப் பாக்கணும்னு சொல்லி, என்னக் கலியாணம் பண்ணிக் கொடுத்துடுச்சு. அதுக்கென்ன,  எம்மூத்தப்புள்ளயப் பாத்துட்டு அதுபோய்ச் சேந்துடுச்சு. அடுத்தடுத்து சின்ன வயசுலயே மூணு புள்ள பொறந்துடுச்சு; பெத்த மருந்து (பிரசவ லேகியம்) எதுவும் சாப்பிடவும் வழியில்லை. ஒழிச்ச இல்லாம வேலையாப் பாத்ததிலயும் என் உடம்பும் ரொம்பவே சுணங்கிப் போச்சு. எனக்கு இப்ப என்ன வயசுங்கிறீங்க? முப்பதுகூட ஆவலைன்னா நம்புவியளா?”

என் தோழிக்கு மட்டுமல்ல, இதுவரை அவளுக்கும் என்னைப் போல நாற்பது, நாற்பத்தைந்து இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கும் அதிர்ச்சியாயிருந்தது. பின்னர், என் தோழி, ரம்ஜான்பீவியின் பிள்ளைகளின் படிப்பைக் குறித்து கேட்டாள்.

“சிறுசு ரெண்டும் பள்ளிக்கோடம் போவுதுங்க. மூத்ததுக்கு பதினாலு, பதினஞ்சு வயசாவுது.  ஏழோ, எட்டோ வரை படிச்சுது. அதுக்கப்புறம் படிச்சது போதும்னு, வீட்டைப் பாத்துக்கச் சொல்லிட்டேன். அதுக்கும் படிக்க இஷ்டந்தான். ஆனா, நான் வேலைக்குன்னு ஒரே நாள்ல அஞ்சு வூடு போவுறதுனால, என் வூட்டுல ஒண்ணும் செய்யமுடியல தாயி. நான் வீட்டில உக்காந்துட்டு, வயசுப்புள்ளய வேலைக்கு அனுப்புனா ஆவுமா? அதா, அவள வீட்டைப் பாத்துக்கச் சொல்லி உக்காரவச்சிட்டேன்.”

“படிச்சுகிட்டே வேலை பாக்கச் சொல்லலாம்ல? படிக்கிற புள்ளைய இப்படி புடிச்சு வச்சிருக்கியே?”

“என்னத்த படிச்சாலும், அத கட்டிக் கொடுத்துத்தானே ஆவணும். படிச்ச புள்ளைன்னா, மாப்பிள அமையறது கஸ்டம். படிச்சா ரொம்ப ரூல்ஸ் பேசுதுங்கன்னு சொல்லி, இப்பலாம் படிக்காத புள்ளயத்தான் கேக்கிறாங்க. அப்படிப் படிச்சாலும், அதுக்கு வச்சிக்கொடுக்க ரூவா (வரதட்சணைப் பணம்) வேற நிறைய கேப்பாங்கம்மா. நான் எங்க போக அதுக்கு?”

“அதுக்காக இப்பவே கல்யாணமா?”

“அடப்போம்மா. இதுவே லேட்டுன்னு எஞ்சொக்காரங்கள்ளாம் என்னயத் திட்டுறாங்க. அவுங்க சொல்றதுக்காக இல்லன்னாலும், எனக்கும், எம்மாப்பிளைக்கும் தெம்பிருக்கும்போதே இதக் கட்டிக்குடுத்தாத்தானே, அடுத்ததுகளையும், காலாகாலத்துல கரையேத்த முடியும், சொல்லும்மா? அதுவுமில்லாம, நம்ம கடமையென்ன கல்யாணத்தோடவா முடியும்? அடுத்து அதுக்குப் பிள்ளைப்பேறு, அந்தப் பிள்ளையள வளக்கது, அப்படியிப்படினு அதுக வாழ்க்கயில நல்லதுகெட்டதுன்னு எல்லாத்துக்கும் பெத்தவுக நாங்களும் கூட இருந்தாத்தானே அதுகளுக்கும் ஆதரவா, தயிரியமா இருக்கும்? அப்பத்தான் எங்க காலத்துக்குப் பொறவு கூடப் பொறப்புகள் ஒண்ணாச் சேந்து ஒத்துமையா இருப்பாஹ.”

“இப்பத்தானே உனக்கு சின்ன வயசுலயே பிள்ளைகள் பிறந்ததால, உன் உடம்பு வீக்காயிடுச்சுன்னு சொன்ன? அதுக்குள்ள உம்பொண்ணுக்கும் அதையே செய்றியே?”

“வாஸ்தவந்தான். ஆனா, அந்தக் காலம் போல இல்லம்மா இப்பம். காலாகாலத்துல அதுகளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யலேன்னா, அதுக வழிதப்பி போயிடும்மா. நம்ம புள்ளைய நல்லா வளத்தாலும், வழிகெடுக்கதுக்குன்னே ஊருக்குள்ள நெறய பேரு இருக்காகம்மா. கல்யாணம் பண்ணிட்டுப் பெர்ற புள்ளையையே இங்க பாதி தகப்பங்காரன் வுட்டுட்டு போயிடுறான். பிரச்னையேதும் வந்தா, ஊர்க்காரவுகள வச்சு பேசி எதாவது வாங்கிக்கணும்னா, நிக்காபுஸ்தவம் இருக்கணும்ல? கல்யாணத்துக்குமின்ன தப்புதண்டா ஆகிடுச்சுன்னா, யாரும்மா அதுல கிடந்து முழிக்கது?”

பதிலில்லாமல் நின்றோம்.

ணவரின் அலுவலகத்தில் பார்ட்டி. கம்பெனியின் வெளிநாட்டுத் தலைமையகத்திலிருந்து ஆங்கிலேயே உயர் அலுவலர்கள் வந்திருப்பதால், ஒரு ஃபேமிலி கெட்-டுகெதர். ஓரிரு வெளிநாட்டு அலுவலர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்களின் மனைவியரோடு நானும், இன்னும் சில பெண்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மனைவியர் என்று நாங்கள் சொன்னாலும், அவர்கள் தங்களை “லைஃப்-பார்ட்னர்” அல்லது “கேர்ள்/பாய்-ஃப்ரண்ட்” என்றே சொல்லிக் கொண்டனர்.

பல விஷயங்கள் பேசினாலும், எங்கள் எல்லாரையும் கவர்ந்தது அப்பெண்களின் ‘ஃபிட்னஸ்’தான். அங்கே சுத்தி, இங்கே சுத்தி, பேச்சு அதில் வந்து நின்றது. ஒருவேளை இன்னும் குழந்தை பெறவில்லையோ என்று நாங்கள் நினைத்ததற்கு மாறாய், ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள். அதிலும் எங்களை அதிகம் கவர்ந்த மேபெல் என்ற பெண்ணுக்கு 15 வயதில் மகள் இருக்கிறாளாம்.

நாங்கள் ஆச்சரியமாக வாய் பிளப்பதைப் பார்த்த மேபேல், இன்னொரு அதிர்ச்சித் தகவலைத் தந்தார். அவருக்கு 30வயதுதானாம். 30 வயசுல 15 வயசுப் பொண்ணுன்னா, அப்ப... என்றாலும், நாகரீகம் கருதி பேச்சை வேறுபக்கம் திருப்பினோம். என்னென்னவோ பேசி, பேச்சு திருமணத்தில் வந்து நின்றது.

இந்தியர்கள் படித்து முடித்து, வேலை கிடைத்த பின்பே, அதுவும் பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் செய்வதும், அதன் பின்பே குழந்தைகள் பெறுவதும் அவர்களுக்குப் பெருத்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. "ஏன் வாழ்க்கையை அனுபவிப்பதை அவ்வளவு தூரம் தள்ளிப் போட வேண்டும்? நாங்களெல்லாம் படிக்கும் போதே சுதந்திரமாகவும், எங்களின் வாழ்க்கையை நாங்களே தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறோம்.”

எங்களின் மௌனத்தைத் தொடர்ந்து அவரே பேசினார், “ஆமாம், எனக்கு முதல் குழந்தை பிறக்கும்போது 15 வயசுதான். ஆசையாகப்  பெற்றுக்கொண்டோம். பிறகு சில காரணங்களால் பிரிந்துவிட்டோம். இருவரும் தனியே படித்து, வேலைத் தேடிக் கொண்டோம். இன்னொரு விஷயம் தெரியுமா? தாயைப் போல பிள்ளை என்று என் மகளும் நிரூபிக்கிறாள். ஆமாம், அவளுக்கும் இரண்டுமாதம் முன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அவளும், அவளின் பாய்-ஃப்ரெண்டும் தற்போது ஒன்றாகத்தான் இருக்கின்றனர். குழந்தையை டே-கேர் செண்டரில் விட்டுவிட்டு, இருவரும்  படிப்பைத் தொடர்ந்துகொண்டே, பகுதிநேர வேலையும் பார்க்கின்றனர். இருவரும் தம் கால்களில் நிற்கின்றனர். அவர்களின் செலவையும், குழந்தையின் செலவையும் அவர்களே சமாளித்தாக வேண்டுமே?” .

ரம்ஜான்பீவி என் மனக்கண்ணில் வந்தாள்.

Post Comment

18 comments:

ஸ்ரீராம். said...

இருதுருவங்கள். இவர்களுக்கு இது சரி...அவர்களுக்கு அது சரி...சமநிலை பெறுமா என்ன உலகம்?!

எல் கே said...

இதுவும் நல்லா இருக்கு ,

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் கதை அதீதத்தில் வெளி வந்தமைக்கு வாழ்த்துகள்.

நல்ல கதை.... பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

Yes....culture, values and rules differ from place to place. :-)

அமுதா கிருஷ்ணா said...

இரண்டு எக்ஸ்ட்ரீம்கள்.ஆனால் எங்கேயும் நடக்கிறது.நடுவில் நாம் அதனால் தான் நம்மை மத்யமர்கள் என்றார் சுஜாதா..

அமுதா கிருஷ்ணா said...

இரண்டு எக்ஸ்ட்ரீம்கள்.நடுவில் நாம்.அதனால் தான் நாம் மத்யமர்கள் என்றார் சுஜாதா.

Jaleela Kamal said...

வாழ்த்துகக்ள்

ஸாதிகா said...

அதீத இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் எழுத்துக்கள் அச்சிதழ்களிலும் நிறைய வரவேண்டுமென்பது என் அவா.

ஸாதிகா said...

ரம்ஜான்பீவி கதையைப்படிக்கும் பொழுது படிக்காத பாமரர்கள் த்சோ..என்போம்.

மேபெல் கதையை படிக்கும் பொழுது படித்த அதிமேதாவிகள் என்போம்.இரண்டையும் இணைத்து அழகியதொரு சிறுகதை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஆமினா said...

அதீதத்தில் வெளியானதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

படிக்க படிக்க சுவாரசியமா இருந்து.... ஊர்பக்க பாஷைக்களை ரசித்தேன்...

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் கதை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்னு ஆகிப்போச்சு இப்பல்லாம்..

pudugaithendral said...

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.

கதை அருமை

vanathy said...

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரேஞ்சுக்கு பேசினாலும் வெளிநாட்டில் டீன் பிரக்னன்ஸி என்றால் முகம் சுழிப்பவர்கள் பலர். பெரும்பாலும் தத்துக் குடுப்பவர்களே அதிகம். ஒரு சிலர் தான் வளர்த்து ஆளாக்குகிறார்கள். சமீபத்தில் ஒரு சேர்வேயின்படி டீன் ஏஜ் வயதில் கர்ப்பம் ஆவது குறைந்து விட்டதாம்.
அதீதம் இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல கதை. கருத்து யோசிக்க வைக்கிறது.
அதீதத்தில் வெளி வந்ததற்க்கு வாழ்த்துக்கள்,ஹூஸைனம்மா.

ADHI VENKAT said...

கதை நல்லா இருக்குங்க. அதீதத்தில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

Sakthi said...

salam

ஹுஸைனம்மா said...

வாழ்த்திய, கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி!!

வானதி - அப்படியா, அங்கயும் இது பிடிக்காத விஷயமா? சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட 30 வயதான ஐரோப்பிய மாடல் ஒருவருக்கு, 15 வயதில் மகள் இருப்பதாக ஒரு செய்தி வாசித்தேன். அதன் விளைவுதான் இந்தக் கதை. நன்றிப்பா.

சக்தி - வ அலைக்கும் ஸ்லாம்.