ஆட்சித் தலைவரைச் சந்திக்க, அந்த ஊரின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். நகரத்திலிருந்து வெளியே செல்லவேண்டுமென்றால் அவர்களின் ஊரைக் கடந்துதான் செல்லவேண்டும். தாங்கள் ஏற்றுக் கொண்ட மாற்றங்களைத் தெரிவிக்கவும், அப்படியே தங்களின் நிலைகளை விளக்கிக் கூறி, தம் கோரிக்கைகளையும் பரிந்துரைக்கு ஏற்கும்படிக் கேட்டுக் கொள்ளவும் வந்திருந்தனர்.
பிரதிநிதிகளில் முக்கியமானவர் பேச ஆரம்பித்தார், “கலீஃபா அவர்களே!! நாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறோம். ஐவேளை தொழுகைகளையும் தவறாது தொழுதுகொள்கிறோம். ஆனால், ’ஸகாத்’ மட்டும் எங்களால் செலுத்தமுடியாது!! இந்த எங்களின் நிபந்தனை ஏற்கப்படுமெனில், இப்போதே எங்கள் ஊர் மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்கத் தயாராக உள்ளோம்.”
கலீஃபாவின் உடனிருந்த தோழர்களும் - உமர் (ரலி) உட்பட- இந்நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்கள். ”முஹம்மது (ஸல்) இறந்துவிட்ட இச்சூழ்நிலையில், எதிரிகள் பெருகிவரும் வேளையில், இக்கூட்டத்தாரையும் நம்மோடு இணைத்துக் கொண்டால், நம் பலம் பெருகும். எனவே, சம்மதியுங்கள்” என்றார்கள்.
கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் அப்பிரதிநிதிகளிடம், “இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்றால், அதன் அத்தனை அடிப்படை அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஒன்றை ஏற்று, ஒன்றை விட்டுவிடுகிறீர்கள் என்றால், இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களாகிறீர்கள். இஸ்லாத்தை உங்களின் வாழ்க்கை நெறியாக்கிக் கொள்ளும்பட்சத்தில், நீங்கள் கொடுக்கவேண்டிய ஸகாத், ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றின் அளவே இருந்தாலுங்கூட, அதை உங்களிடமிருந்து நான் பெறாது விடமாட்டேன்” என்று சொல்லியனுப்பினார்கள்!!
ரமதான் என்றதும் நினைவுக்கு வருவது நோன்பு மட்டுமல்ல, ‘ஸகாத்’ எனப்படும் வரியும்தான்!! இதைத் தானம், தர்மமென்று சிலர் சொல்வர். அதைவிட, இது இஸ்லாம் விதித்த ‘சொத்தின்மீதான வரி’ என்பதுதான் சரியானது. ‘ஸகாத்’ என்ற சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்துதல்’, ‘வளர்ச்சியடைதல்’ என்று அர்த்தங்கள் உண்டு. சொத்திற்குரிய வரியைக் கொடுத்துத் தூய்மைப்படுத்திப் பெருக வைத்தல் என்று சொல்லலாம். ஸகாத் கொடுப்பதால், சொத்துக்கள் மட்டுமல்ல, கொடுப்பவரின் உள்ளமும் தூய்மை பெறும். இறைவனின் அருளும் பெருகும்.
நம்மிடம் இருக்கும் எல்லாவிதமான சொத்திற்கும் - வீடு, நிலம், நகை, விவசாய விளைபொருட்கள், கால்நடைகள், வருமானம், இருப்புத்தொகை, கடனாக கொடுத்துள்ள தொகை - இப்படி எல்லாவற்றின்மீதும், ’தனக்குப் போய்த்தான் தானமும், தர்மமும்’ என்பதாக, சொந்தத்தேவைக்குப் போக மிஞ்சியவற்றின்மீது மட்டுமே வரி கடமையாகிறது. பொருளைப் பொறுத்து, குறைந்த பட்சம் 2.5% முதல் குறிப்பிட்ட சதவகிதம் வரி உண்டு.
ஸகாத் வரியின் நோக்கம், செல்வம் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல், பரவலாக்கப்பட வேண்டும். இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதன்மூலம், அவர்களும் பின்னாட்களில் ஸகாத் கொடுக்கக்கூடியவர்களாய் ஆகுமளவு வளம்பெற வேண்டும் என்பதே. இதன்மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும்.
’ஸகாத் தொகை கொடுப்பதற்கு அதிகத் தகுதியுடையவர்கள் உறவினர்களே’ மற்றும் ’ஸகாத்தை ஒருவரின் சொந்த ஊரிலேயே கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்ற அறிவுறுத்தல்கள் தம் உற்றார், பிறந்த ஊரை முன்னேற்றுவதே ஒருவரின் முதல் கடமை என்பது புரியவரும்.
ஸகாத் கொடுப்பதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. அவற்றில் முதலாவது, எந்தச் சொத்தின்மீது ஸகாத் கொடுக்கிறீர்களோ, அதன் முழுமுதல் சொந்தக்காரர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அதாவது அந்தச் சொத்தின்மீது எல்லா உரிமையும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களின் தேவைக்குப் போக, குறிப்பிட்ட அதிகபட்ச அளவை அடைந்திருக்க வேண்டும். அந்தச் சொத்து (விளைபொருட்கள் தவிர) உங்களை அடைந்து ஓராண்டு (இஸ்லாமிய வருடம்) நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஸகாத் கடமையாகும் பொருள் நம்மிடம் ஒரு வருடம் முழுமையாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால், இந்த வருடம் முஹர்ரம் மாதத்தில் ஒரு சொத்து வாங்குகிறீர்கள் என்றால், அது வாங்கி ஒரு வருடம் முழுமையடைந்தவுடன்தான் வரி கடமையாகிறது. அதன்படி, இந்த ரமலான் மாதம் அதற்கு வரி கொடுக்க வேண்டாம். அதே சமயம், அடுத்த ரமலான் வரும்வரை காத்திருக்காமல், முஹர்ரமிலேயே வரி கொடுத்துவிடவேண்டும். ஆக, இந்திய இன்கம்டாக்ஸிற்கு மார்ச் மாதம் மாதிரி, ஸகாத்திற்கு ரமலான் மாதம் ’எல்லை’ கிடையாது. ஒருபொருள் எவ்வப்போது அதன் ஓராண்டுகால எல்லையை அடைந்துவிடுகிறதோ அப்போது அதன் வரியைச் செலுத்திவிடவேண்டும்.
எனில் ரமலான் மாதம் ஏன்? அம்மாதத்தில் செய்யும் நற்செயல்கள் அதிகமதிக நன்மையைப் பெற்றுத் தரும் என்பதால் இருக்கலாம். எனினும், அததற்கான வரியை, தாமதப்படுத்தாமல் அவ்வப்போதே செலுத்திவிடுவதே நல்லது. மேலும், நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒருவகையில் பொருளாதார அழுத்தத்தையும் குறைக்கும். அதாவது, ரமலான் மாதத்தில் கணக்குபோட்டு ஸகாத் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், ஸகாத்தின் மொத்தத் தொகையை ஒரே நேரத்தில் புரட்டுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். அதுவே ஒவ்வொரு பொருளுக்கும் , அதை வாங்கிய மாதத்தில் ஸகாத் என்று கொடுத்து வந்தால், சிரமம் குறையும்.
மேலும், மொத்தமாக ரமலானில் கொடுக்கும்போது, அந்த மாதத்திற்குள் ஸகாத்தைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்று ஏற்படுத்திக் கொண்ட கட்டாயத்தால், சில வேளைகளில் தகுதியற்றவர்களுக்குக் கூட கொடுத்து விட நேரிடுகிறது. அதுவே ஸகாத்தை வருடம் முழுதும் பரவலாகக் கொடுத்து வந்தோமானால், தக்கமுறையில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இருப்பினும், வருடமொருமுறை மொத்தமாகக் கொடுக்க நினைக்கிறோம் என்றால், அத்தொகையைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது நல்லது. வெறுமே சிலருக்கு 500, 1000 என்று கொடுக்காமல், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்கேற்ற தொழில்செய்ய உதவிகள் செய்து, அவர்களும் ஸகாத் கொடுக்குமளவு தன்னிறைவு பெறவைப்பது பொருத்தமானது. இதுபோலவே பலரும் கூட்டாகச் சேர்ந்து ஸகாத் தொகையை ஒன்றிணைத்து பெரிய அளவில் பயன்கள் தரக்கூடிய நல்லகாரியங்கள் செய்யலாம்.
திருக்குர் ஆனில், “ஸகாத்தைச் செலுத்துவீர்களாக” என்று மக்களுக்கு அறிவுறுத்தியதுபோலவே, “அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை எடுப்பீராக” என்றும் நபி(ஸல்) அவர்களுக்கு ஆணையிடுகிறான் இறைவன். இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படவேண்டும். அரசு அதை ஒருங்கிணைத்து, மக்களின் நலத்திட்டங்களிலும், பாதுகாப்பிற்கும் செலவழிக்கும்.
இதைச் சுட்டிக்காட்டி, சிலர் தம் நாட்டில் செலுத்தும் வரிகளை ஸகாத்தில் கழிப்பார்கள். அது தவறு. ”ஒருவருடைய சொத்தில் ஜகாத் சொடுத்துவிட்டு, அதே நேரம் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு வேறு வரிகளும் இருந்தால் அதனையும் ஒருவர் தன் சொத்தில் இருந்து கொடுக்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் இந்திய/தாம் வாழும் நாட்டின் அரசிற்குச் செலுத்தும் வருமான/சொத்து/இத்யாதி வரிகள் ‘ஸகாத்’தில் அடங்காது. ஸகாத் செலுத்தப்படுவதற்கு இஸ்லாமிய அரசே தகுதிபெறும்.
முன்காலத்தில் இஸ்லாமிய அரசுகள், வேறு நிலையான வருமானங்கள் அதிகம் இல்லாத நிலையில் தம் மக்களிடமிருந்து பெற்ற ஜகாத், ஜிஸ்யா வரிகளே ஆட்சி நடத்த உதவின. ஜகாத்தைப் போலவே
ஜிஸ்யாவிற்கும் ’தன்னிறைவு’ போன்ற நிபந்தனைகள் இருந்தது. தற்காலத்திய இஸ்லாமிய நாடுகளில் வேறு நிலையான வருமானங்கள் உள்ளதால், அந்நாட்டு அரசாங்கங்களால் ஸகாத் வசூலிக்கப்படுவதில்லை (என்பது என் எண்ணம்).
மக்களின் ஸகாத்தை ஒன்றிணைத்து, எல்லாத் துறைகளிலும் பெரிய பெரிய நல்ல திட்டங்களைச் செயல்படுத்த இன்று அரசாங்கத்தைப்போல கட்டுக்கோப்பான அமைப்பு எதுவும் இல்லாததால், மக்கள் சில்லறை சில்லறையாக ஸகாத்தை விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ’ஸதகா’ எனும் நன்கொடை கொடுக்க வேண்டிய முறையில் ஸகாத்தைக் கொடுத்து வருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதனாலேயே, முழு வளர்ச்சி நிலையை எட்ட முடியவில்லை. தற்காலங்களில் சில முஸ்லிம் அமைப்புகளும், சில ஊர்களின் ஜமாத்களும் ‘பைத்துல் மால்’ என்ற நிதிக்கருவூல அமைப்பை ஏற்படுத்தி பணம் வசூலித்து வருகிறார்கள். இவற்றின்மூலம், பெரும்பாலும் கல்வி உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லாக் கடன், பெண்கள் திருமண உதவி என்று கொடுத்து வருகிறார்கள்.
எனினும், என் மனதிற்கு, ”யானை தன் பலம் அறியாது” என்பதாக நாம் இன்னும் “ஸகாத்”தின் முழுபலத்தை அறிந்திடவில்லை என்றே தோன்றுகிறது. இறைவனருளால், இக்காலங்களில் இஸ்லாமியர்களில் செல்வந்தர்கள் பெருகியுள்ளார்கள். ஒரு ஊரைச் சேர்ந்த ஒருசிலரின் ஸகாத்தை ஒன்றுசேர்த்தாலே, அவ்வூரை வளம் கொழிக்க வைத்து, தன்னிறைவு பெறச் செய்யலாம், இன்ஷா அல்லாஹ். ஆனால், அதற்கான விழிப்புணர்வும், திறம்பட முன்னெடுத்துச் செயலாற்ற வேண்டியவர்களைக் கண்டடைவதுமே இன்றைய அவசியம்.