”ஏய் ரகுமத்து... என்னா செய்றே? இங்க வா.. வந்து இந்த துணியளக் கொண்டு போய் வாஷிங் மெஷின்ல போடு!!”
“என்னம்மா... இப்பத்தான் பரிச்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சிருக்கு... அதுக்குள்ள வேலை சொல்ல ஆரம்பிச்சுட்டியா... கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க விடும்மா..”
“வயசுப் புள்ளைக்கு என்ன ரெஸ்ட் வேண்டிக் கிடக்கு? அப்படி என்ன வெட்டி முறிச்சுட்ட? சும்மாவே இருந்துகிட்டு ரெஸ்ட் வேற வேணுமாக்கும்? என்னவோ கையாலேயே துவைக்கப்பொற மாதிரிதான்...”
“ம்மா... சும்மா தொணதொணங்காதே... துணிய வாஷிங் மெஷின்லதான போடணும்.. அவளவ்தான? அப்புறமாப் போட்டுக்கிறேன்.. ஆள விடு...”
”ஆமாமா... நானெல்லாம் பேசினா உனக்கு அப்படித்தான் இருக்கும். என் பேச்சைக் கேட்டா, ஒனக்குத்தான் நல்லது. இல்லாட்டிப் போனா, நாள பின்ன நீயி போற வீட்டுல அம்புட்டுப் பேரு வாயிலயும் வுழுந்து எந்திக்கணும். அதுக்குத்தான் சொல்லுறேன்....”
அதைக் கண்டும் கொள்ளாமல், பதிலும் சொல்லாமல், கையில் மொபைலும், காதில் ஹெட் ஃபோனுமாய் ரஹமத் சோஃபாவில் புதைந்து கொள்ள, ஜன்னத் ஆயாசமாய் புலம்ப ஆரம்பித்தாள். சரியாய் அந்நேரம் ஜஃபருல்லா பாய் வீட்டினுள் நுழைய, பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டது போல பிராது கொடுக்கத் தொடங்கினாள்.
“எல்லா வேலயும் நானேதான் பார்க்கணுமா? கொஞ்சம் கூட மாட ஒத்தாச செஞ்சா, அப்படியே எல்லா வீட்டுவேலையும் படிச்சுக்கலாம்ல? உங்க அருமந்த புள்ளைகிட்ட நீங்களாவது கேளுங்க... எம்பேச்சையெல்லாம் யாரு மதிக்கிறா இங்க..?”
”புள்ளைக்கு இப்பத்தானளா பரிச்சை முடிஞ்சிருக்கு. ஒரு வாரம் போவட்டும். அப்புறம் வேலையெல்லாம் டாண்டாண்னு செஞ்சுத் தருவாப்ல... நீயே அசந்துட மாட்டே”
“ஆமா... புஸ்தவத்தைப் படிச்சதுலயே களச்சு போயாச்சு உங்க வாரிசு... நா என்ன அம்மி அரைக்க, ஆட்டுரல ஆட்டவாச் சொல்லுறேன்... மாடு மாதிரி வளந்து நிக்கிது.. மிக்ஸில ஒரு தேங்கா அரக்கத் தெரியுமா? அட கிரைண்டர் ஆன் பண்ண சுச்சு எங்கருக்கான்னாவது தெரியுமா உங்க புள்ளக்கி?”
“எளா... இதெல்லாம் பெரிய்ய விசியமா.. அதெல்லாம் தேவைன்னு வரும்போது தன்னால படிச்சிக்கிடும்... வுடுளா...”
“ஆமா... இப்படியே என்னயேச் சொல்லுங்கோ... நாள பின்ன, எட்டுப்பத்து பேரு இருக்க வூட்ல ஒருவேலையும் தெரியாம முழிச்சுகிட்டு நின்னா தகப்பனையா கொற சொல்லுவாங்க? அம்மக்காரி வளத்த லச்சணத்தப் பாருன்னு எந்தலயல்ல ஊர்ல உருட்டுவானுவோ?”
”அதெல்லாம் உருட்ட மாட்டாங்க. இத்தன வருசம் படிச்சிட்டிருந்த புள்ளக்கி வூட்டு வேல செஞ்சுபடிக்க நேரம் இருககாதுன்னு தெரியாதா என்னா அவுகளுக்கு? அந்த வூட்ல இருக்கவுகளும் ஆரம்பத்துல இப்படிச் சின்னஞ்சிறுசா அறியாம புரியாம வாழ வந்தவுகதானே? அதெல்லாம் அஜ்ஜஸ் பண்ணிப்பாவோ... நீ சும்மா இரு..”
”இப்படியே என் வாயை அடைக்கிறதிலியே குறியா இருங்கோ... நானெல்லாம் இந்த வயசுல..”
“எளா... சும்மாயிருளா.. எல்லாரும் எல்லா வேலயும் படிச்சிகிட்டா பொறந்து வர்றோம். நானும் மொதல்ல ஹாஜியார் இரும்புக் கடைல வேலைக்கிச் சேந்தோடனே கல்லாவுலயா ஒக்காந்தேன்? டீ வாங்கியாறது... தண்ணி பிடிக்கது, கடயத் தூத்து வார்றதுன்னுதான் ஆரம்பிச்சேன்... இப்பம் நம்ம கடேலயும் அஞ்சாறு பேருக்கு டிரேனிங் கொடுக்கோம்ல? அத மாரி...”
“அட அதத்தான நானுஞ் சொல்றேன்... எல்லா வேலயும் படிச்சுகிட்டு போனோம்னா இந்த மாரி எடுபுடி வேலயெல்லாம் செய்ய வேணாம். நேரா மெயினான வேலைல ராசாவாட்டம் ஒக்காந்துக்கலாம். நம்ம ரகுமத்தும் அடுப்பு வேல எல்லாந்தெரிஞ்சுகிட்டுப் போனா, போற இடத்துல பகுமானமா அடுப்புல நின்னு தாளிச்சுக் கொட்டிட்டு நவுண்டுடலாம். இல்லயினா, வூடு தூத்து துடைக்கிறது, சாமாஞ்செட்டு கழுவுறது, அடுப்பங்கரையை கழுவிவுடுறதுன்னு கஸ்டமான வேலையெலாம் புதுசா வந்தவந்தலயில போட்டுடுவாஹ.. ”
“வாட் ரப்பிஷ்!! அம்மா!! நான் எம்.எஸ். படிக்க ஸ்டேட்ஸ் போப்போறேன்!! அங்க ஆல்ரெடி ஒரு வீட்டுல ஷேர் பண்ணி ஒண்ணா சேந்து சமச்சு குடியிருக்கிற என் சீனியர் ஃப்ரண்ட்ஸ் கூட நானும் ஜாயின் பண்ணிக்கப் போறேன். ஏதோ வேலையில ஜாயின் பண்ணப்போற மாதிரி, இதுக்குமா ”எக்ஸ்பீரியன்ஸ்” தேவை?” என்று கத்தினான் ரஹ்மத் என்கிற ரஹ்மத்துல்லா கான்.
|
Tweet | |||