Pages

உன்னைக் காணாத கண்ணும்





கணப்பொழுதேனும் பிரிய மனமின்றி
கைப்பிடித்தே திரிந்தோம்
காணும்போது சிரித்து
காணாதபொழுதும்
கண்டிருந்த கணங்களை
கவனத்தில் கொண்டு நகைத்து, இனி
காணும்பொழுதில் கதைக்கவேண்டியதை
கருத்துருவாக்கி
கண்டதும் கலகலவென
கரைகடந்த வெள்ளமாய்
கலந்து கதைகள் பேசி
களித்திருந்தோமே
கண்பட்டுவிட்டதோ கண்ணே
காணவே கணமில்லாமல் போனதே
களைப்புறாமல் காத்திருப்போம்
கலங்காதிரு என் செல்ல வலைப்பூவே!!






 .
 .
 .

 .
 .
 .
 .
 .
 .
ஹி..ஹி... பெற்றோர் வருகை, தங்கை பிரசவம், வீடு நிறைய ஆட்கள்... என செம பிஸி!! அதைவிட,  மாமனார்-மாமியார் முன்பு மாப்பிளையை கெத்தோடு “மரியாதையாக”  நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் என்பதுதான் உண்மையான காரணம். க்க்ர்ர்ர்ர்ர்..... :-)




Post Comment

டிரங்குப் பொட்டி - 30




வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் “டீயா, காஃபியா?” என்று  கேட்பதுண்டு. இப்ப இத்தோடு இன்னொரு ஆப்ஷன் சேரும் போலருக்கு.  தேயிலைச் செடிகளின் இலையிலிருந்து தயாரிப்பது தேயிலைத் தூள்; காப்பி மரத்தின் கொட்டைகளிலிருந்து கிடைப்பது காப்பிப் பொடி. (நோ.. நோ.. சமையல் க்ளாஸ் எடுக்கலைங்க) இப்ப இன்னொன்ணு சொல்றாங்க, காப்பி மர இலைகளிலிருந்தும் தேநீர் (கா-நீர்??) தயாரிக்கலாமாம். இந்தத் தேநீர், வழக்கமான தேநீரை விட நல்லதாம், கசப்பு இருக்காதாம். ஏற்கனவே எத்தியோப்பியா, சூடான் நாடுகளில் புழக்கத்தில் உள்ளதாம் இந்த காஃபி-டீ!!

அப்ப தேயிலைச் செடியிலருந்தும் இனி காப்பி தயாரிக்கலாம்னு தேநீர்ப் பிரியர்கள் கண்டுபிடிப்பார்களோ?
 

                                                 -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-    
    
   சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம்
    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
    கொடையும் பிறவிக் குணம்

இந்தப் பாட்டின் முதல்வரியான, ”சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்கிற வரியை அடிக்கடி வாசித்திருப்போம். பயன்படுத்தியுமிருப்போம்.  இந்தப் பாட்டு (ஒருவிதத்தில்) தமிழ் மொழியைப் பெருமைப்படுத்துவது என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் (எங்கு, யார் எழுதியது என்று நினைவில்லை) வாசித்தது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, இந்தப் பாட்டின் பொருள்படி, தமிழ் ஒன்றும் அத்தனைக் கஷ்டமானது இல்லை; பேசிபேசிப் பழகிட்டா (செந்)தமிழும் வசப்படும். ஆனா, இரக்கக்குணமும் தயாள மனசும் பிறவியிலேயே இருந்தாத்தான் உண்டு, பயிற்சியில் வராததுன்னு சொல்வதன்மூலம், ஒப்பீட்டளவில் தமிழைச் சற்றுக் குறைவாகச் சொல்லிருக்காங்க நம்ம ஔவைப்பாட்டி!! 


                                                  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-   
    

abcnews.com

www.swfwmd.state.fl.us
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் சென்ற வாரம் திடீரென்று ஏற்பட்ட ஆழ்குழியில் விழுந்து ஒருவர் காணாமல் போய்விட்டார்.  தன் வீட்டின் படுக்கை அறையில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அறையின் கீழுள்ள பூமி அப்படியே உள்வாங்கி பிரமாண்ட குழி ஒன்று ஏற்பட்டதில்,  அவரோடு சேர்ந்து அறையிலுள்ள பொருட்களையும் பிளந்த பூமி விழுங்கிவிட்டது!! ஃப்ளோரிடா மாகாணத்தில் இப்படி குழிகள் ஏற்படுவது புதிதல்ல. காரணம், அதன் பூமி பெரும்பாலும் நுண்துளைகள் நிறைந்த சுண்ணாம்புக்கற்களால் ஆனது.  நிலத்தடி நீர் அதிகமாகச் சேரும்போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கற்கள் ஊறிப்போயிருக்கும். ஒருநாள் திடீரென கரைந்து பள்ளமாகிவிடும். தண்ணீரே இல்லையென்றாலும், காய்ந்துபோகும் சுண்ணாம்புக்கற்கள் நொறுங்கிப் போய் இப்படியாகுமாம்.

அங்கெல்லாம் வீடுகள் (பெரும்பாலும் மரவீடுகளே என்பதால்) கட்டும்போது ஃபவுண்டேஷன் பில்லர்கள் போடமாட்டார்களோ? அல்லது அவை இருந்தாலும் பயனில்லையா? என்பது தெரியவில்லை. 


                                                  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-    
 
விநோதினி, வித்யா மரணத்தைத் தொடர்ந்து, அமில வீச்சு சாதாரணமாகி விடுமோ என்ற அச்சம் நிலவி வந்தது.  ஆஸிட் வீசினால் கடுந்தண்டனை வழங்க வேண்டும் என்பது சாத்தியமானதாகத் தெரியாத நிலைமையில் நீதி இருக்கிறது. ஒருவேளை சாத்தியமாகும் சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும், அது நிறைவேற நீண்டகாலமாகும் நிலைதான் இங்கு. இருக்கும் பிரச்னைகளோடு, இந்தப் பிரச்னைக்கும் தீர்வில்லாமல் போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அமில விற்பனை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்படும் என்று
முதல்வர் தெரிவித்துள்ளது வயிற்றில் பால்வார்க்கும் செய்தி. நன்றி முதல்வருக்கு. காலந்தாழ்த்தாமல் உடனே நடைமுறைப்படுத்தினால் நல்லது. 

                                                  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-    

 பெரிய மகன் பத்தாவது படிக்கிறான். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். இப்போது பொதுத் தேர்வு நடந்துவருகிறது.  அவனது பள்ளியில், விஞ்ஞானப் பாடத்திற்குக் கொடுக்கப்பட்ட செய்முறைத் தேர்வு புத்தகம், (science practicals) புதிய பாடத்திட்டத்திற்கானது இல்லை; முந்தைய  சிலபஸைப் பின்பற்றும் பழைய புத்தகம் என்பது அவனுக்குச் சமீபத்தில்தான் தெரியவந்தது. சில மாணவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் (ஒருவேளை டியூஷன் டீச்சர் மூலம் அறிந்திருக்கலாம்) தாங்கள் வாங்கியிருந்த புதிய புத்தகத்தை, சென்ற மாதம் மாதிரித் தேர்வுகளின்போது கொண்டுவந்திருந்ததைப் பார்த்துத்தான் அவன் இதை அறிந்தான்.  இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், புதிதாகச் சேர்க்கப்பட்ட பல பாடங்கள் பழைய புத்தகத்தில் இல்லை. உடனே அவன் சி.பி.எஸ்.இ. வலைத்தளத்தினைப் பார்த்து உறுதிசெய்துகொண்டு, பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றான். அவர்களும் இதை உறுதிசெய்துகொண்டு, புதிய புத்தகத்தினைப் பிரதிகள் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பரிட்சைக்கு ஒரு வாரம் முன்பு கொடுத்தார்கள்.

பழைய சிலபஸ்/புத்தகம் மாறியது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்பது ஒரு அதிர்ச்சி. அதைவிட,  அதை அறிந்த மாணவர்கள் அதைத் தன் சக வகுப்பினருக்குக்கூடத் தெரிவிக்காமல், தாங்கள் மட்டும் புதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டார்கள் என்பதுதான் எனக்குப் பெரிய அதிர்ச்சி!!

Post Comment

ஒரே ஒரு பொய் மட்டும்...




போன மாசம், லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங். இந்த மாசம் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்!

லான்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தித்தான் பிடிபட்டார். ஆஸ்கர் அதையும் தாண்டி, கொலையே செய்திட்டார்னு குற்றச்சாட்டு. நாலஞ்சு மாசம் முன்னே நடந்த ஒலிம்பிக்ஸில் ஸ்டார் அட்ராக்‌ஷனாக இருந்த ஆஸ்கர், இப்ப கொலைகாரரா நிற்கிறார். 





ஆஸ்கர் பிஸ்டோரியஸ், பிறந்தவுடனே இரண்டு கால்களையும் இழந்தவர். பிற்பாடு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. இரண்டும் செயற்கைக் கால்களே என்றாலும், உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக்ஸில் பல வெற்றிகளைக் குவித்திருந்தார். எனினும், பாரா ஒலிம்பிக்ஸோடு  தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், முழு உடல் திறன் பெற்றவர்களுக்கான வழமையான ஒலிம்பிக்ஸில் பங்கு பெறும் உரிமையை, 2008 முதல் போராடி, சென்ற வருடம் பெற்றார். கால்களுக்குப் பதிலாக கார்பன் இழைகளால் செய்யப்பட்ட தகடுகளைக் கொண்டவர் என்பதால், “ப்ளேட் ரன்னர்” (Blade runner) என்றே அழைக்கப்பட்டார். 

சென்ற ஒலிம்பிக்ஸில் வெற்றி பெறாவிட்டாலும், மக்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர், இப்போது தனது காதலியைக் கொன்றதாகக் கொலைப் பழியோடு நிற்கிறார்!  “வேண்டுமென்றே கொல்லவில்லை; இரவில் திருடன் என்று நினைத்துத் தவறுதலாகச் சுட்டுவிட்டேன்” என்று மன்றாடினாலும், சாட்சியங்கள் மனக்கசப்பினால் நிகழ்த்தப்பட்டது என்றே நம்ப வைக்கின்றன.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்  “Tour de France" என்கிற சைக்கிள் மராத்தான் போட்டியில், கலந்துகொண்ட ஏழு முறையும் வென்றவர்.  இதுவே ஒரு அரிய சாதனை. அதிலும், கேன்ஸரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என்பதால் கூடுதல் புகழ் பெற்றார். பலராலும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்பட்டார்.

   

ஆனால்,  ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மிகக் கடுமையாக அறிக்கைகள் விட்டு மறுத்துக் கொண்டிருந்தார்.  அமெரிக்க போதை மருந்து தடுப்புத் துறையும் (USADA) விடாமல் ஆதாரங்களோடு மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியபோது, ஒரு கட்டத்தில், “இனி நான் போராட விரும்பவில்லை. இத்துடன் விலகிக் கொள்கிறேன்” என்றெல்லாம் கருத்து தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு அவருக்குப் பரிதாபங்களையும் பெற்றுத் தந்தது.  லான்ஸ் குற்றமற்றவராகவே இருப்பார்;  கேன்ஸரோடு போராடி உடல்நலம் பெற்று, பின் கடும்பயிற்சியின் மூலம் தொடர்வெற்றிகளைக் குவித்த அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு, இந்த அரசு இயந்திரங்கள் ரொம்பத்தான் படுத்துகின்றன என்றுதான் மக்களை எண்ண வைத்தன.

ஆனால், சில வாரங்கள் கழித்து ”நான் ஊக்க மருந்து பயன்படுத்தத்தான் செய்தேன்” என்று ஒத்துக் கொண்டபோது, உலகமே அதிர்ந்தது.   அவர் போதை தடுப்புத் துறையை மட்டும் ஏமாற்றவில்லை; இதன் மூலம் அவரை முன்மாதிரியாகக் கருதிப் பூஜித்து வந்த ரசிகர்களையும், அவரை நம்பி முதலீடு செய்த நிறுவனங்களையும் ஒருசேர நம்பிக்கை மோசம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

ந்நிகழ்வுகளைப் பார்த்து ஒரு சாமான்ய மனிதனுக்கு என்ன எண்ணங்கள் வரும்? ஜெயிப்பதற்காக எதுவும் செய்யலாம் என்றா? ஜெயித்துவிட்டால் எதையும் செய்யலாம் என்றா?

இனி வெற்றியாளர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆஸ்கரின் செயலாவது (நியாயப்படுத்த முடியாதென்றாலும்), கோபத்தினால் நொடியில் விளைந்தது. ஆனால், லான்ஸின் செயல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட துரோகம் அல்லவா? “ஊக்க மருந்து இல்லையென்றால் ஏழு வருடம் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார் இப்போது.  எனில், இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறார்.

இனி, இதுபோன்ற வெற்றியாளர்களின்மீது எம்மாதிரியானக் கண்ணோட்டம் இருக்கும்? ஏற்கனவே இந்தியாவில் அரசியல் குறுக்கீடுகளால், விருதுகள், பரிசுகள் பெறுபவர்கள், இந்திய அணிகளில் இடம்பெறுபவர்கள் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை நிலவுகிறது. வெளிநாடுகளில் அவ்வாறான அரசியல் குறுக்கீடுகள் ஏறக்குறைய அறவே இல்லை என்பதால், விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்கள்மீது மிகுந்த மதிப்பு இருந்து வந்தது. ஆனால், லான்ஸின் இந்தச் செயல் அதற்கும் முடிவு கட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 90களில் பென் ஜான்ஸன் நிகழ்வுக்குப் பிறகு, அதே தாக்கம் தந்திருப்பது லான்ஸின் செயலே.

இனி “ரோல் மாடல்கள்” என்று நிகழ்கால மனிதர்கள் யாரையும் குறிப்பிட்டு, குழந்தைகளுக்கு அடையாளம் காட்டுவதற்குப் பெரிய தயக்கம் வரும்.

ப்போதேனும் ஒரு பொய் சொல்வதென்பது வேறு;  திட்டமிட்டு ஒரே பொய்யை, ஏழு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து சொல்லி ஏமாற்றி வருவதென்பது வேறு என்று சிலர் சொல்லலாம்.  ஆனால், இந்தத் தொடர் பொய்யுரைத்தலுக்கு அந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் தொடக்கப் புள்ளி என்பதை மறந்துவிடுகிறோம்.

மனவள அறிஞர்கள் இது குறித்துச் சொல்லும்போது, “நாம் எல்லாருமே பொய் சொல்லத்தான் செய்கிறோம்.  எல்லாமே சின்னச் சின்னப் பொய்கள் என்பதால், அதில் தவறில்லையென்றே நம்புகிறோம்” என்கின்றனர். ஆஃபிஸிலிருந்து வீடு வரத் தாமதமானால், பரிட்சையில் மதிப்பெண் குறைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவில்லையென்றால், கடனைத் திருப்ப முடியவில்லையென்றால், தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லையென்றால்... இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்கள் பொய் சொல்ல.. அந்தப் பொய்யுரைத்தலை நாம் நியாயப்படுத்துகின்றோம் என்பதுதான் இதில் விந்தை.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பயமுறுத்தல் ஒரு புறம்; “பொய்மையும் வாய்மையிடத்து, புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்” என்கிற அறிவுரை ஒருபுறம் என்று குழம்பிப் போகும் மக்கள் “White lies" - கள்ளமில்லாப் பொய்கள் என்று ஒரு வகையைப் பகுத்துக் கொண்டார்கள். இந்த வகைப் பொய்கள் ஆபத்தைத் தராதவை என்பதால், இது சரியே என்பது அவர்களின் வாதம்.

ஒரு மேலைநாட்டு ஆசிரியர், “பைபிளின் பத்து கட்டளைகளில் “பொய் சொல்லாதே” என்று சொல்லப்படவில்லை. ஆகவே பொய் சொல்லுவதில் தவறில்லை என்று நினைப்பவர்களும் உண்டு” என்கிறார்!!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று எல்லாத் தரப்பினரும் பொய் சொல்வது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதை எதிர்க்கும் திராணி இருப்பவர்களும்கூட நம் வேலை சரியாக நடந்தால் போதும் என்று தன்னலத்தோடு இருந்துவிடுகிறோம். அல்லது, ஆடையணியாத அரசனிடம் உண்மையைச் சொன்னால் நம் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று இருந்த மக்களைப் போல, பொய்யைப் புகழ்ந்து கொள்கிறோம். இதனால்தான் இன்றும் இலைகள் இறக்கைகள் ஆகின்றன.  ஏழே நாளில் டல் திவ்யா, தூள் திவ்யா ஆகிறாள்.

பொய் சொல்வது வெகு சாதாரணமாகிவிட்ட இக்காலத்தில், ஒருவரின் பெரிய பொய்கள் வெளிப்படும் சூழ்நிலை உருவானால், உடனே சம்பந்தப்பட்டவரே “ஆமாம், அறியாமல் பொய் சொல்லிவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டால் உடனே “அதான் ஒத்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டுட்டாருல்ல? விடுங்கப்பா” என்று பரிதாப அலையை அள்ளிக் கொடுத்து மேலும் புனிதராக்கிவிடுகின்றோம்.

மொடாக்குடி தொடங்குவது ஒரு சிறு ஸிப்பில்; செயின் ஸ்மோக்கிங்கின் ஆரம்பம் ஒரே ஒரு இழுப்பு. போலவே, எல்லாப் பொய்களுக்கும் தொடக்கம் ஆபத்தில்லாததாகக் கருதப்படும் ”ஒரு சிறு பொய்”தான்.  அது நாம் விரும்பும் பலனைத் தரும்பட்சத்தில், அது சரியெனக் கருதப்படுகிறது. ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஒன்பது பொய் சொல்லியாக வேண்டும். இப்படியே ஒரு பொய் வளர்ந்து, பெரிதாகி, குட்டிகள் போட்டு, பல்கிப் பெருகுகின்றது. இதுவரையிலான பொய்களால் தீயது விளைந்திருக்காது. அந்நேர மகிழ்ச்சி தரும் விளைவுகளே கிடைத்திருக்கும். பொய் சொல்லியும் போஜனத்திற்குக் குறைவில்லை என்று பொய்-நம்பிக்கை தரும். அது துணைக்கு மற்றவற்றையும் அழைத்துவரும்.

பொய்யின் வகைகளில் ஒன்றாக, வீட்டினுள் ஒரு முகம், வெளியே வேறு முகம் காட்டுவதை நியாயப்படுத்துகிறோம். Etiquettes என்ற பெயர்களில், போலித்தனமாக சிரித்து, புகழ்ந்து நடித்து, பொய்யான ஒரு இமேஜைக் காணத் தருகிறோம்.  உற்றவர்களானாலும் தவறுகளை எடுத்துச் சொல்லித் திருத்த முனையாமல், ’அது நாகரீகமல்ல’ என்று பொய்ச்சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.

பொய் பேசும் விளம்பரங்கள்.  அந்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவையும், பெரிய கட்டிடங்களின் வாடகையையும் பொருளின் விலையில் சேர்த்து அதிக விலைக்கு விற்கப்படுவதைத்தான் “க்வாலிட்டி நல்லாருக்கும்” என்று தெரிந்தே பொய்யாக நம்புகிறோம். ஒப்பனைகள் பூசி பொய்யான மு(அ)கத்தைக் காட்டுபவர்களை உயர்வானவர்களாகக் கருதுகிறோம். பொய் சொல்வதற்கென்றே ஏப்ரல் ஃபூல் என்றொரு நாள் ஒதுக்கி, பொய் சொல்லி ஏமாற்றுவதைப் பெருமையாக நினைத்துக் கொண்டாடி மகிழ்கிறோம். 


சிறுவயதில் படித்த கல்கண்டு வார இதழில் லேனா தமிழ்வாணன் ஒருபக்கக் கட்டுரைகள் எழுதி வந்தார்.  நல்ல அறிவுரைகளை, சுவாரசியமான நடையில் எழுதுவதால், பல மனதில் இறுக்கமாகப் பதிந்ததுண்டு. அவற்றில், “பிள்ளைகளிடம் நீங்கள் ஏதேனும் வாக்கு கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். “ஆமா, நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுவே, ஆனா செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டால் அது பெற்றோராக நீங்கள் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது” என்பதும் ஒன்று.

இதையே பின்னாட்களில் ஹதீஸ் புத்தகங்களில் நபிகளாரின் அறிவுரையாகவும் கண்டேன்:  ஒரு சிறுவனை,   அன்னை ”இங்கே வா, நான் உனக்கு ஒன்று தருகிறேன்” என்று அழைத்தபோது நபி(ஸல்) அவர்கள் ”அவ்வாறு அழைத்துவிட்டு, அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

ஆனால், வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்வது; அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா மகனுக்கு பாக்கெட் மணி தருவது என, பெற்றோர்களின் பொய்களைக் கேட்டு வளரும் குழந்தைகளும் பொய் சொல்லுவது தவறில்லை என்று எடுத்துக் கொள்கின்றனர்.  அப்பெற்றோர்களும், “என்னிடம் பொய் சொல்லாத வரை சரி” என்று அதைக் கண்டுகொள்வதில்லை.

இந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் எல்லா குற்றங்களுக்கும் ஆதாரஸ்ருதியாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதே இல்லை. 


திருந்தி வாழ நினைத்த ஒருவன், அதற்கான வழியைத் தேடியபோது, அவனிடம் ஒருவர் “எது வேண்டுமோ செய்துகொள். பொய் மட்டும் சொல்லாமலிரு.” என்றாராம்.  ”வாய்மை” என்ற தலைப்பில் ஓர் அதிகாரம் எழுதியுள்ள வள்ளுவரும் இதையே சொல்கிறார்:
”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"                        
”பொய்யுரைக்காமையை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும்;  மற்ற அறங்கள் செய்யத் தேவையில்லை”  என்று திருவள்ளுவர் எடுத்துரைப்பதிலிருந்து தெரியவருவது: ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும்.  தவிர்த்தால்,  நல்வாழ்வின் தொடக்கம்.


Post Comment