Pages

ஒரு டயரிக் குறிப்பு....




ழக்கம்போல எல்லாரும் ஒண்ணா ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாலே, “நான் எங்க இருக்கேன்?” என்ற ரேஞ்சில்தான் சில நாட்கள் வரை சுற்றிக் கொண்டிருப்பேன். இதில், அப்பாவையும் மகனையும் மட்டும் முன்னாடி அபுதாபி அனுப்பி வச்சிட்டு, ஒரு பத்து நாள் கழிச்சு நான் மட்டும் வந்தா, வந்தா....  ஆளில்லாமல் பூட்டி இருக்கும் வீட்டைக் கூட சீக்கிரம் ஒழுங்குபடுத்திவிடலாம். ஆனால், ஆண்கள் மட்டும் இருக்கும் வீட்டை..... 😢😭


நான் ஊரில் இருக்கும்போது என்னிடம் ”இந்த குக்கருக்கு இந்த வெயிட்டுதானா” என்று வூட்டுக்காரர், படம் அனுப்பி கேட்க, #ஒரு_நிமிஷம்_தலை_சுத்திடுச்சு!! வீட்டுல இருக்கும்போதே, இருக்கும் நாலு குக்கர் வெயிட்டுகளில் எது எந்த குக்கருக்கு என்று தேர்ந்தெடுக்க “இங்கி-பிங்கி-பாங்கி” போடுமளவுக்குக் குழம்புவேன். ஒரு மாசமா சமையலையே மறந்துட்டு ஊரில் இருக்கிறவளிடம் கேட்டா....??? “இருங்க, யோசிச்சு சொல்றேன்..”ன்னு சொல்லிட்டு, ரூமைப் பூட்டிகிட்டு உக்காந்து யோசிச்சுப் பாத்துப் பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு!!

றவினரின் டீனேஜ் மகள், பொங்கலுக்காக, பள்ளியில் பாரம்பரிய உடை அணிந்து வரச் சொல்லிருக்காங்க என்று என்னிடம் அவளுக்குப் புடவை கட்டி விடச்சொன்னபோதும்,  #ஒரு_நிமிஷம்_தலை_சுத்திடுச்சு!! முகலாயர்களின் சுடிதார்-சல்வார், மேலை நாட்டின் ஜீன்ஸ், அரபுகளின் பர்தான்னு மாறிவிட்ட உலகமயமாக்கல் உலகில் திடீர்-குபீர் “மேக் இன் இந்தியா” மாதிரி திடீர் பாரம்பரியமா சேலையைக் கட்டச் சொன்னா..... மறுபடியும் உக்காந்து யோசிச்சுப் பாத்து, ஒரு வழியா எப்படியோ கட்டிவிட்டுட்டேன்...  

இந்த ஒரே ஒரு நாள் கூத்துக்காக, மாணவிகள் சேலை மற்றும் மேட்சிங் ஐட்டங்கள் வாங்குவதற்குச் செய்யும் செலவுகளைப் பார்த்து வாய் பிளந்த கதை தனி! பெற்றோர்கள் எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்!! டீனேஜ் பெண்கள் மட்டுமல்ல, மற்ற பெண்களும் - ஏன் ஆண்களும்கூட ஒரே ஒரு நிகழ்வுக்காகச் செய்யும் ஆடைக்கான செலவுகளைப் பார்த்தால், பயம்மாக இருக்கிறது. 😕 எப்படித்தான் கட்டுப்படியாகுதோ என்று வியப்பாகவும் இருக்கு! 😱

ஒரு திருமணத்திற்கு அணிந்த உடையை வேறு விசேஷங்களுக்கு அணியக்கூடாது என்ற ”கொள்கை”யில் பெரும்பாலானோர் - வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள், ஆண்கள்-பெண்கள் வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் உடன்பிறப்புகள் திருமணத்திற்கு மட்டும்தான் புத்தாடை வாங்குவார்கள். இப்போ, யார் வந்து திருமணப் பத்திரிகை கொடுத்தாலும், உடனே கடைக்கு படையெடுப்பு நடக்கிறது. கல்யாண வீட்டினரும், “லைஃப்ல ஒன்லி ஒன் டைம்”னு சொல்லிகிட்டு.... அந்த திருமணப் பத்திரிகைக்குச் செய்யும் செலவு இருக்கே....  அந்தப் பத்திரிகைகள், பல வீடுகளில் பின்னர் எதுக்குப் பயன்படும்னு சொன்னா....  சரி, வேணாம்....

திருமணங்கள் முன்பைவிட, மிக மிக விமர்சையாக நடத்தப்படுகின்றன. முன்பெல்லாம், பெண் வீட்டார்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மாப்பிள்ளை வீட்டினரின் demands-ஐச் நிறைவேற்றத் திணறுவார்கள். இப்போதெல்லாம், மாப்பிள்ளை வீட்டார்தான் பாவம்! ஆம்!! பெண் வீட்டார்கள், அவர்களுக்கு லிஸ்ட் போட்டுத் தரும் வேலைக்கே இடம் கொடுக்காமல், தாங்களே, போதும் போதுமெனுமளவுக்கு அதிஆடம்பரமாகத் திருமணத்தை நடத்திவிடுகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு ஈடாக, பதில் விருந்து-சீர்கள்-செய்முறைகள் செய்தாக வேண்டிய கட்டாய நிலை!! கொள்கை எதுவாக இருந்தபோதிலும், அல்லது கொள்கையே இல்லாதவர்கள் என்ற வேறுபாடோ, இந்த ஊர்-அந்த ஊர் என்றோ வேறுபாடில்லை இதில் மட்டும்.

க்கள் பெருக்கத்தைவிட, வாகனப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக,  இருசக்கர வாகனங்கள் பெருமளவு காணப்படுகின்றன. சாலைகளில், தெருக்களில் நடக்கவே முடியாத அளவுக்கு இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன.

கீழேயுள்ள படத்தில், எங்க ஊரில், ஒரு தெருவின்  சிறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் இவை - என்றால், தெரு முழுதும் எவ்வளவு இருக்கும்?? கார்கள் கணக்கு தனி.


மேலப்பாளையம் மாநகராட்சியிலிருந்து பணியாளர்கள் நாள்தோறும் வந்து குப்பையை வாங்கிச் செல்வதால், தெருக்கள் குப்பையின்றி சுத்தமாக இருக்கின்றன.  ஆனால், பஜாரில், இறைச்சிக் கடைகளின் அருகே கழிவுகள் சாலையிலேயே கொட்டப்பட்டு வருகின்றன. அவ்வழியே செல்ல முடியாதபடி நாற்றமெடுத்தாலும்கூட,  அருகிலிருப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளாதது அதிர்ச்சி!! ஒரு கடைக்காரரிடம் கேட்டேன், பழகிடுச்சு என்றார். :-(

நாகர்கோவிலில் (கோட்டார்) மக்கள் வசிப்பிடங்களிலேயே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பக்கத்து காலி ப்ளாட்டுகளில் குப்பை போட்டுவிட்டு, ப்ளாட் ஓனரை “சுத்தம் செய்யாம வச்சிருக்கீங்களே” என்று கண்டிப்பார்கள்!!

ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவங்கள் இம்முறையும் - பல விதங்களில் மக்கள்...    ஒரு விஷயம் தெளிவு.... நல்ல உடல்நலமும், அதிகாரமும் கையில் இருக்கும் வயதில், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், உறவுகளை எப்படி நடத்துகிறோமோ அது அப்படியே முதுமையில் திருப்பிக் கிடைக்கிறது.

திருச்சி சென்றிருந்த போது, தற்செயலாக அங்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவர் அதன்புத்தக ஆசிரியரான  திருமதி. கமலா ராஜன் அவர்கள்! ஆச்ச்சரியத்திற்குக் காரணம் அவருக்கு 77 வயது!!  சிறுவயது முதல் எழுதி வந்த கதை, கவிதைகள் ”மங்கையர் மலர்” உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து, அத்தோடு அவர் வரைந்த ஓவியங்களில் சிலவற்றையும் சேர்த்து பதிப்பித்திருக்கிறார்.

ஓவியத்தில் அதீத ஆர்வம் உள்ள அவர், தனது 60--65 வயதுக்குமேல், அருகிலுள்ள ஸ்ரீரங்கத்திற்குச் சென்று பல வகை ஓவியங்களையும் பயின்று வந்தாராம். அவரது திறமைகள் குறித்த பேட்டிகள் தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் இப்போதும் வெளிவந்திருக்கின்றன.

60 வயது தாண்டினாலே, “இனி என்ன இருக்கு வாழ்க்கையில்....” என்று சோர்ந்து விரக்தியடையும் பெண்கள்  மத்தியில், கிடைத்த  ஓய்வை தன் திறமையை மெருகேற்றிக் கொள்ளப் பயன்படுத்தி, தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் திருமதி. கமலா இராஜன் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உண்டு!!

விழாவில் தலைமையேற்றுப் பேசிய, திருச்சி காவேரி பெண்கள் கல்லூரி முதல்வர் திருமதி. சுஜாதா அவர்கள், மற்ற பேச்சாளர்கள் சொன்ன “பெண்களின் முன்னேற்றத்திக்கு ஆணாதிக்கமே தடை” என்ற கருத்தை உடைத்து, முன்னேறிய பெண்களுக்கும் ஆண்களே காரணம் எனப் பேசினார்.

முன்பெல்லாம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கச் செல்வதுண்டு எனவும், ஆனால் தற்போது தினமும் வரும் பஞ்சாயத்துகளைப் பேசி முடிப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். மாணவிகள் செய்யும் தவறுகளுக்குத் துணை செய்யும் பெற்றோர்களைக் கண்டித்தார்.

சில மாதங்கள் முன்பு, மழை நீரைச் சேகரிப்பது குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். எங்கள் வீட்டிலும் அதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இறையருளால் இம்முறை நிறைவேறியது. இப்பயணத்தில் மிகவும் மனநிறைவான விஷயம் இது.

எனது ஊரான மேலப்பாளையத்திலும் பல தெருக்களில் இளைஞர்கள் ஒன்றிணைந்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு துளைகள் ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  பல இடங்களில் மரங்களும் நட்டு வருகிறார்கள்.



திருச்சி போகும்போது, இரயிலில் உடன் இருந்த பெண், அவரது கைக்குழந்தை  தூங்காத காரணத்தால் தூங்காமல் விழித்திருந்தார். காலை 11 மணி அளவில் குழந்தை தூங்கியதும்,  அப்பெண்ணையும் படுங்க என்று சொல்லிவிட்டு நானும் எனது கணவரும் வேறு இருக்கைக்கு மாறிக் கொண்டு, திரும்பிப் பார்த்தால், அவர் தனது கணவரை ஓய்வெடுக்கச் சொல்லி அதில் படுக்க வைத்திருக்கிறார்!!!  ச்சே.... இந்தப் பெண்களே இப்படித்தான்!! 😠😠

திரும்பி வரும்போது பேருந்தில்தான், அதுவும் கடைசி இருக்கைகள் தான் கிடைத்தன. கொஞ்ச தூரம் வந்ததும், முன் வரிசைகளில் ஒரு இருக்கை காலியானதும் என் கணவரை அங்கு அமருமாறு வலியுறுத்தி  அனுப்பி வைத்தேன்!! பாவம்... அவருக்கு முதுகுவலிக்கும்ல.... ;-) 😉


Post Comment